
திருக்குறளை கம்போடிய அரசு அந்நாட்டின் பள்ளிப் பாடப்புத்தகத்தில் சேர்ப்பதற்கு ஆணையிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த யூன் மாதம் கம்போடிய அரசு உயரதிகாரிகள் பல்லவ மன்னர்களுக்கும், கம்போடிய மன்னர்களுக்கும் இருந்ததாக கருதப்படும் அரசியல் மற்றும் கலாசார ரீதியிலான உறவு குறித்து அறிந்து கொள்ளும் வகையில் தமிழகம் வந்தனர். அப்போது பல்லவ மன்னர்களுக்கும், கம்போடிய மன்னர்களுக்குமிடையில் நிலவிய நட்புறவைப் பறைசாற்றும் வகையில் பல சான்றுகளை நேரில் கண்டு சென்றனர்.
அந்தப் பயணத்தின் எதிரொலியாக கூடிய விரைவில் கம்போடியாவில் 25 கோடி ரூபா செலவில் சோழ மன்னன் முதலாம் இராஜேந்திர சோழனுக்கும், கம்போடியாவின் கெமர் வம்சத்தைச் சேர்ந்த முதலாம் சூர்யவர்மனுக்குமான நட்பைப் பறைசாற்றும் வகையில் இருவருக்கும் சிலைகளை அமைக்க கம்போடிய அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
மேலும் குறிப்பாக தமிழ்நாட்டுக்கும் கம்போடியாவிற்கும் உறவு ரீதியாகப் பாலம் அமைக்கும் வகையில் சுமார் 1330 குறள்களை கொண்ட பொய்யாமொழி என அழைக்கப்படும் திருக்குறளை கம்போடிய அரசு அந்நாட்டின் பள்ளிகளில் பாடப்புத்தகத்தில் சேர்க்க ஆணையிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கூடிய விரைவில் திருக்குறளை கம்போடியர்களும் கற்கவுள்ளார்கள் என்பது தமிழுக்குச் சேர்க்கப்பட்டதொரு பெருமையாகப் பலராலும் கருதப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.