யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் கிழக்குப் பல்கலைக்கழகமும் இணைந்து வட-கிழக்குப் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் ஒன்றியம் எனும் பெயரிலான அமைப்பு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை(18.10.2022) கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சந்திப்பினைத் தொடர்ந்தே குறித்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் நடைபெற்ற சந்திப்பில் வட-கிழக்குப் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் தலைவராக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை-கலாசார பீடத்தின் தலைவர் நி.தர்சன் தெரிவு செய்யப்பட்டதுடன் செயலாளராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவர் அ.விஜயகுமாரும், பொருளாளராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த பிரதீபனும், ஊடகப் பேச்சாளராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த இராசரெத்தினம் தர்சனும், செயற்பாட்டு உறுப்பினராக கிழக்குப் பல்கலைக்கழக மாணவி அனுஸ்திகாவும் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்தக் கட்டமைப்பானது வட-கிழக்கின் அனைத்துப் பல்கலைக்கழகத்தினையும் உள்ளடக்கியதாக எதிர்காலத்தில் உருவாக உள்ளதாக வட-கிழக்குப் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் நி.தர்சன் தெரிவித்தார்.
இதேவேளை, வட-கிழக்கில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்களை இணைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த அமைப்பின் அங்குரார்ப்பணம் இன்று இடம்பெற்ற நிலையில் ஏனைய மாவட்டங்களில் உள்ள வளாகங்களையும் இணைந்து இந்த அமைப்பை வலுப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க உள்ளதாக வட-கிழக்குப் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
வட-கிழக்கில் உள்ள தமிழ்மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளுக்கு ஆதரவாகச் செயற்படும் வகையிலும் இந்த அமைப்புச் செயற்பட உள்ளதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
(செ.ரவிசாந்)