யாழ்.இளவாலை பெரியவிளானில் ஜே-153 கிராம சேவையாளர் பிரிவிற்கு உட்பட்ட 19 பொருளாதார நலிவுற்ற குடும்பங்களுக்குப் பூமணி அம்மா அறக்கட்டளையின் வாழ்வாதார உதவியாக இரண்டாவது கட்டமாக அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(27.11.2022) வழங்கி வைக்கப்பட்டது.


மேற்படி பகுதியில் அமைந்துள்ள பயனாளி ஒருவரின் இல்லத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மேற்குறித்த பகுதிகளில் வசிக்கும் குறைந்த வருமானங்களைக் கொண்ட 19 குடும்பங்களுக்கு குடும்பம் ஒன்றிற்குத் தலா இரண்டாயிரம் ரூபாய்ப்படி மொத்தமாக 38 ஆயிரம் ரூபா பெறுமதியான அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள் கையளிக்கப்பட்டன.
பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கைக்கான செயலாளரும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம் மற்றும் அறக்கட்டளையின் ஆலோசகர் இ.மயில்வாகனம் ஆகியோர் நேரடியாகக் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு குறித்த உதவிகளை வழங்கி வைத்தனர்.


இதேவேளை, இம்மாத ஆரம்பத்திலும் இளவாலை பெரியவிளானில் 15 பொருளாதார நலிவுற்ற குடும்பங்களுக்குப் பூமணி அம்மா அறக்கட்டளையினரால் வாழ்வாதார உதவியாக அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)