லென்ஸ், ஸ்பாட்லைட்ஸ் என புகழ் வெளிச்சத்திலேயே இருந்த, மிகவும் கொண்டாடப்பட்ட மாடல் பிரதைனி சர்வா, ‘போதை ஏறி புத்தி மாறி’ படத்தின் மூலம் நடிகையாக தனது பயணத்தை தொடங்குகிறார். ஏற்கனவே குறும்படங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்ற தீரஜ் இந்த படத்தில் நடிக்கிறார்.
போதை ஏறி புத்தி மாறி திடுக்கிடும் திருப்பங்களை கொண்ட, சீட்டின் நுனிக்கே வர வைக்கும் ஒரு திரில்லர் திரைப்படம். ரசிகர்களைக் கவரும் அனைத்து அம்சங்களும் படத்தில் உண்டு. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்கிறார். கேபி இசையமைக்கிறார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். கோபி ஆனந்த் கலை இயக்குனராகவும், சாபு ஜோசப் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிகிறார்கள்.

இந்த படம் குறித்து நாயகி பிரதைனி சர்வா கூறும்போது, இயக்குனர் சந்துரு எனக்கு கதையையும், என் கதாபாத்திரத்தையும் விளக்கிய போது, என் கதாபாத்திரம் பிருந்தாவை எனக்கு மிகவும் பிடித்துப் போனது. வெறுமனே என் கதாபாத்திரம் மட்டுமல்ல, படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் அழுத்தமானதாக இருந்தது, கே.ஆர்.சந்துரு உண்மையில் திறமை வாய்ந்த இயக்குனர், அவரது திறமையை திரையுலகம் கண்டிப்பாக புகழும் என்றார்.