இலங்கை விவகாரத்தினை ஐ.நா பொதுச்சபைக்கு அல்லது பாதுகாப்புச் சபைக்குப் பாரப்படுத்துவதன் மூலம் சர்வதேச நீதிமன்றத்தினால் அல்லது விசேடகுற்றவியல் நீதிமன்றத்தினால் இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கெதிரான குற்றங்கள் விசாரிக்கப்பட்டுப் போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டுமென யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கு கால அவகாசம் வழங்க வேண்டாம், தமிழின அழிப்பிற்கு சர்வதேச விசாரணை வேண்டும், இலங்கையைப் பொதுச் சபைக்குப் பாரப்படுத்த வேண்டும் ஆகிய மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் முன்னெடுத்த மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி இன்று சனிக்கிழமை(16) முற்பகல் பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமாகி யாழ். நகரிலுள்ள மாநகர சபை மைதானம் வரை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அங்கு மாபெரும் கூட்டமும் இடம்பெற்றது. இதன்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூகம் சார்பாக மாணவரொருவர் பிரகடன அறிக்கையைச் சமர்ப்பித்து உரையாற்றினார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு,

தமிழ்மக்களிற்கு எதிரான சிங்கள பௌத்தப் பேரினவாத அரசின் அடக்குமுறைகள் என்பவை இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதல் இன்று வரை தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இத்தகைய தமிழ்மக்களிற்கு எதிரான அடக்குமுறையின் உச்சமே 2009 ஆம் ஆண்டு இறுதிப்போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டும், காணாமலாக்கப்பட்டமையுமாகும்.
இந்த மனிதகுலத்திற்கு எதிரான போர்க்குற்றங்கள், மனிதவுரிமை சட்ட மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள், இனப்படுகொலை என்பவற்றிற்கு எதிராக சர்வதேச நீதி விசாரணை ஒன்றினைத் தமிழ்மக்கள் எதிர்பார்த்திருந்த போது சர்வதேசம் 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30/1 தீர்மானத்தின் மூலம் கலப்பு விசாரணைப் பொறிமுறை உட்பட 25 விடயங்களை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமெனப் பரிந்துரை செய்தது.
மேற்குறிப்பிட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30/1 தீர்மானத்தின் 25 பரிந்துரைகளையும் நிறைவேற்றாது கால இழுத்தடிப்பு செய்து வருகின்றமையினையே நாம் அவதானிக்க முடியும். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 25 பரிந்துரைகளுள் இலங்கை அரசாங்கம் நல்லிணக்கம் சம்பந்தமான ஒரு கலந்தாய்வுச் செயலணியை உருவாக்கியது. குறித்த செயலணி சில முன்னேற்றகரமான பரிந்துரைகளினை முன்மொழிந்த போதும் இலங்கை அரசாங்கம் அப் பரிந்துரைகளினை வேண்டுமென்றே உதாசீனம் செய்தமையால்நல்லிணக்கத்திற்கான கலந்தாய்வு செயலணி பயனற்றுப் போனது.
அதுபோலவே காணமல்போனோர் அலுவலகம் உருவாக்கப்பட்டபோதும் அதன் செயற்திறனற்ற தன்மையாலும், திட்டமிட்டஅரசாங்கத்தின் நடவடிக்கையாலும் அதிகாரமற்ற ஒன்றாகக் காணப்படுவதாலும் ஏமாற்றமளிக்கும் ஒன்றாகவே உள்ளது. மேலும், இழப்பீட்டிற்கான அலுவலகம் தொடர்பில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள போதும் இதுவரையில் இழப்பீட்டிற்கானஅலுவலகம் உருவாக்கப்படவில்லை.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீளாய்வுசெய்தல் எனும் போர்வையில் அதனைவிடவும் மோசமான சட்டமொன்றினை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்ற வகையில் தமிழ் மக்களின் அபிலாசைகளைப் புறந்தள்ளிய வகையிலான யாப்புருவாக்க முயற்சிமேற்கொள்ளப்பட்டபோதும் இன்றும் அத்தகைய முயற்சியும் கைகூடாதுள்ளது.
இவ்வாறான நிலையில் ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 25 பரிந்துரைகளும் காணப்படும் நிலையில் மேற்கொண்டு மீளவும் காலஅவகாசம் வழங்குவதானது மேலும் கால இழுத்தடிப்பிற்கே வழிவகுக்கும் என்பதால் காலஅவகாசம் வழங்குவதனை எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது.காலங் கடந்தநீதி மறுக்கப்படும் நீதியே என்கின்ற முடிவினை நோக்கி ஐ.நாசபையானது தமிழ்மக்களினைத் தள்ளப்போகிறதா..?என்றகேள்வியும் நியாயமானதே.
ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டுப் பத்தாண்டுகள் நிறைவடையும் நிலையிலும் தமிழ்மக்களின் பூர்வீக தாயகத்தில் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வகையிலானதிட்டமிட்டகுடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றமை, தொடர்ந்தும் முன்னாள் போராளிகள் கைதுசெய்யப்படுகின்றமை, அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாமை, மக்களின் காணிகளிலிருந்து முழுமையாக இராணுவத்தினரை வெளியேற்றி மக்களினை மீள்குடியேற்றம் செய்யாமை,தமிழ்மக்களின் பூர்வீகதாயகத்தில் பௌத்தவிகாரைகள் அமைத்தல் தொடர்கின்றமை, வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் தீர்வின்றித் தொடர்கின்றமை, மகாவலி அபிவிருத்தித் திட்டத்தினூடாகவும், தொல்லியல் திணைக்களத்தினூடாகவும் வனவளப் பாதுகாப்புத் திணைக்களங்களிற்கூடாகவும் நிலஆக்கிரமிப்புக்கள் தொடர்கின்றமை போன்ற தமிழ்மக்களிற்குஎதிரான அடக்குமுறைகள் இன்றும் தொடரும் நிலையில் காலஅவகாசம் வழங்குவதன் மூலம் இலங்கைத் தீவில் தமிழ் மக்களிற்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்வதனை சர்வதேசமும் அங்கீகரிக்கப் போகின்றதா..?
ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டுப் பத்தாண்டுகள் நிறைவடையும் நிலையிலும், யுத்தத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் வாழ்வாதாரமும் உளத் தேவைகளும் இதுவரை மேம்படுத்தப்படவில்லை.
1970 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட தரப்படுத்தலினால் பல்கலைக்கழகங்களிற்கு உள்வாங்கப்படும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதுடன், தொடர்ச்சியாக இன்று வரை பல்கலைக்கழகங்களிற்குத் தமிழ் மாணவர்கள் உள்வாங்கப்படுவதில் பாரபட்சம் பார்க்கப்படுகின்றது. அரசியல், பொருளாதார ரீதியில் அடக்குமுறைக்குள்ளிருக்கும் தமிழ்மக்களிற்கு விமோசனம் கிடைக்கவேண்டும். ஆகவே, இன அடக்குமுறைக்கும், இனப் படுகொலைக்கும் எதிரானசர்வதேச நீதி விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும். அதனூடாக இனப்பிச்சினைக்கான தீர்வினை நோக்கி இலங்கையினை சர்வதேச சமூகம் நகர்த்த வேண்டும் என்பதே தமிழ்மக்களின் எதிர்பார்ப்பாகும்
எனவே, தமிழ்மக்கள் ஐக்கியநாடுகள் மனித உரிமைபேரவையின் 30/1 தீர்மானத்தினையே ஏற்றுக்கொள்ளாத நிலையில் தொடர்ந்தும் காலஅவகாசம் வழங்குவதனைஏற்றுக்கொள்ளமுடியாது.ஆட்சியிலுள்ள அரசாங்கம் திட்டமிட்டுத் தமிழ்மக்கள் மீதான அடக்கு முறைகளினைப் பிரயோகித்து வருகின்றது. மறைமுகமாக இனப்படுகொலையினைப் புரிந்துவருகின்றது. இத்தகைய நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர சர்வதேசமட்டத்தில் ஐ.நா சபை செயல்படவேண்டும்.